அவினாசி அருகே வேகத்தடையில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி
அவினாசி:
சேலம் மாவட்டம் கூட்டாத்துபட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதிஷ் குமார் (21). அதே பகுதியை சேர்ந்த மணி மகன் தினேஷ் (22). இவர்கள் இருவரும் அவினாசி அடுத்துள்ள துலுக்க முத்தூரில் தங்கி அப்பகுதியில் உள்ள பால் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நடுவச்சேரியில் இருந்து அவினாசி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார். சதிஷ்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார்.
இவர்கள் அவினாசியை அடுத்துள்ள சின்னேரிபாளையம் பிரிவு பகுதியில் வந்த போது சாலையில் வேகத்தடை இருப்பதை கவனிக்காததால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கடுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் இருவருக்கும் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சதிஷ் குமார் இறந்தார். தினேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.