செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு: சகோதரர் கைது

Published On 2020-02-14 10:51 GMT   |   Update On 2020-02-14 10:51 GMT
திருமங்கலம் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை கொன்று உடலை எரித்த சகோதரர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ் (வயது28). குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

தினமும் மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு வழக்கம்போல் சுரேஷ் மது குடித்து விட்டு கத்தியுடன் வலம்வந்தார். அப்போது பொதுமக்களை மிரட்டி தகராறில் ஈடுபட்டார்.

இதை அறிந்த அவரது பெரியப்பா மகன் வெங்கடேஷ் (38) என்பவர் சுரேசை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் வெங்கடேசை குத்த முயன்றார்.

உடனே வெங்கடேஷ் சுதாரித்துக்கொண்டு சுரேசை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்களுக்குள் பேசி தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் சுரேசின் உடலை எரிக்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்குள்ள சுடுகாட்டில் சுரேசின் உடலை எரித்தனர். இதற்கிடையில் இந்த தகவல் கூடக்கோவில் போலீசாருக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் உடல் முழுவதுமாக எரிந்திருந்தது. எஞ்சிய பாகங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேசை அடித்துக்கொன்ற வெங்கடேசை கைது செய்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரிக்க முயன்ற உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News