திருவண்ணாமலை அருகே லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கண்ணகுருக்கை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21). இவரது நண்பர் திருவண்ணாமலை தாலுகா தண்டரை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (20).இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இவர்கள் பைக்கில் நேற்று முன்தினம் இரவு நூக்காம் பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்றனர் .
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த செல்வத்தை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான உதயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.