மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கண்டனம்
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே மறவன்குளம், நெடுங்குளம், பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு சாலை பணிக்கான கால்கோள் நட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் சரித்திர சாதனையை இன்று சத்தமில்லாமல் படைத்திருக்கிறார். இதனை எதிர் கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் அங்கீகாரங்களையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடிய வில்லை. ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வருகிறது.
இதனைபொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரீகத்தை கடந்து பேசுகிறார் என்றால் அது அவருடைய இயலாமையை காட்டுகிறது. இறுதியில் விருது கொடுத்தவர்களை அடிப்போம் என சொல்லுகிற வகையில் அவர்களது உள்ளத்தில் உள்ளதை கூறியுள்ளார். இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழக அரசுக்கு, மத்திய அரசு விருது கொடுத்துள்ளது என்றால் இது நமக்கு கிடைத்த பெருமை. ஆகவே இந்த பெருமையை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதில் களங்கம் கற்பிப்பது, குற்றம் கண்டுபிடிப்பது, விவாதம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.