செய்திகள்
கடத்தல்

அய்யலூர் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்

Published On 2020-01-20 11:44 GMT   |   Update On 2020-01-20 11:44 GMT
45 நாட்களுக்கு முன்பு தேர்வு எழுத சென்ற தனது மகள் கடத்தப்பட்டதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் தாய் புகார் அளித்துள்ளார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தோப்பு பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி (வயது 45). இவரது மகள் வடமதுரை அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு எழுதச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

எனது கணவர் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். எனவே நான் மில் வேலைக்கு சென்று எனது மகளை படிக்க வைத்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு தேர்வு எழுதச் சென்ற அவள் வீடு திரும்பவில்லை. விசாரித்ததில் ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (35) என்பவர் எனது மகளை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

ஆட்டோ ஓட்டி வரும் அவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர். எனது மகள் படத்தை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிரட்டி வந்தார். தற்போது அவர்தான் எனது மகளை கடத்தி வைத்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அவர் உயிரோடு இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பது கூட தெரியவில்லை.

எனவே எனது மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். மகளை கடத்திய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுது மனுவை அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இருந்தபோதும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தேவி தெரிவித்தார்.

Tags:    

Similar News