செய்திகள்
குரும்பூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
குரும்பூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரும்பூர்:
குரும்பூர் அருகே உள்ள மேலவரண்டியவேல் பகுதியை சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவரது மகன் மாரிசேகர் (வயது 28), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று தண்ணீர் பந்தலை சேர்ந்த இவரது நண்பரான மாயாண்டி என்பவரை சந்திக்க சென்றார். அப்போது அங்கு மின் விசிறி இயங்கிக்கொண்டு இருந்தது. அதனை நிறுத்த மாரிசேகர் முயன்றார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்