திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (வயது 40), பாலாஜிநகரை சேர்ந்த முத்து (38), முருகம்பாளையத்தை சேர்ந்த தண்டபானி (38), எம்.எஸ்.நகரை சேர்ந்த ராஜேஷ் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து 530-யை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.