செய்திகள்
விருதுநகரில் பெண்கள் திடீர் மறியல்
விருதுநகரில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால் பெண்கள் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர்:
விருதுநகர் காந்திபுரம் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அங்கு கழிவுநீர் வீதிகளில் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை.
இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் ரெயில்வே பீடர்சாலை சந்திப்பில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதுகுறித்த தகவல் கிடைத்தும் விருதுநகர் மேற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.