அவினாசி அருகே பெயிண்டரை அடித்து கொன்ற வாலிபர் கைது
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள எஸ்.மேட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ஸ்ரீகாந்த்(16), வாசுதேவன்(15) என 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வாசுதேவன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு எஸ்.மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றார்.
அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் சாமிநாதன் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியது.
இதில் நாய் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது. தான் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்ததால் ஆத்தி ரமடைந்த சாமிநாதன், வாசுதேவனை திட்டினார். இதுகுறித்து வாசுதேவன் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து தனது மகனை திட்டிய சாமிநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சாமிநாதன், ராஜேந்திரனை பலமாக தாக்கி கீழே தள்ளினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.