செய்திகள்
கோப்பு படம்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர்

Published On 2019-12-12 12:31 GMT   |   Update On 2019-12-12 12:31 GMT
நெல்லை டவுனில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை சேர்ந்தவர் விஸ்வ லட்சுமணன். இவரது மனைவி கலையரசி என்ற சத்யா (வயது29). விஸ்வ லட்சுமணன் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா கணவரை பிரிந்து டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது குடும்ப நண்பரான சாத்தான்குளம் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (33) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சத்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன் திடீரென சத்யாவின் கையை பிடித்து இழுத்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இதற்கு மறுத்த சத்யாவை அவர் தாக்கி அவதூறாக பேசினார். பின்னர் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து வந்து சத்யாவின் மீது ஊற்றினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர் சத்யாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் தப்பியோடிய ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News