செய்திகள்
வைகை அணை நீர் மட்டம் உயர்வதால் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டிய பகுதிகளிலும் பெய்த கன மழை காரணமாக பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை நெருங்கி உள்ளதால் கூடுதல் தண்ணீர்திறக்கப்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் பெரியறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.05 அடியாக உள்ளது. வரத்து 1007 கன அடி. நேற்று வரை 1650 கன அடி தண்ணீர் வெளியேறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 650 கன அடி குறைக்கப்பட்டு 1000 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4277 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 68.80 அடியாக உள்ளது. வரத்து 2487 கன அடி. திறப்பு 2840 கன அடி. இருப்பு 5521 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடி. வரத்து 52 கன அடி. திறப்பு 30 கன அடி.