செய்திகள்
நகை திருட்டு

ராணுவ வீரர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

Published On 2019-11-28 17:16 GMT   |   Update On 2019-11-28 17:16 GMT
காவேரிபட்டணம் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தொட்டிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது36). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(32). இந்த நிலையில் நேற்று வெண்ணிலா தனது வீட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

இதையடுத்து வெண்ணிலா மீண்டும் மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வெண்ணிலா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

மேலும் அங்கு இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது. இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் வெண்ணிலா வீட்டிலிருந்து வெளியில் சென்ற நேரத்தில் முன்பக்க கதவை மர்ம ஆசாமிகள் உடைத்து, அங்கிருந்த கட்டிலின் கீழ் பகுதியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News