செய்திகள்
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது வார்டு வரையறையில் குளறுபடி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போனது.
தற்போது வார்டு வரையறை முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.