செய்திகள்
கோப்பு படம்.

கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்- சுற்றுலா பயணிகள் தவிப்பு

Published On 2019-11-25 12:59 GMT   |   Update On 2019-11-25 12:59 GMT
கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்தால் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் அதிக குளிரும் பனி மூட்டமும் காணப்படுகிறது.

பகல் பொழுதிலேயே சாலைகள் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை ஆகிய பகுதிகள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பிரையண்ட் பூங்கா ஏரியை கூட சில நேரங்களில் காண முடியவில்லை.

வானில் மேகக் கூட்டங்களும், பனி மூட்டமும் நிரம்பி இருக்கும் சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் பனி மூட்டம் இயற்கை அழகை காண முடியாத அளவுக்கு இருப்பதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சாலைகளின் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் தற்போது 15 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது. இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 10 டிகிரி செல்ஷியஸ் வரை காணப்படுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது.

தற்போது கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. சாரல் மழையுடன் பனி மூட்டமும் நிலவி வந்தாலும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மலைச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பனி மூட்டத்தால் விபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மிதமான வேகத்தில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் மலைச் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றபடி உள்ளது.

Tags:    

Similar News