செய்திகள்
சுரேஷ்ராஜன் எம்எல்ஏ

அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்- சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேட்டி

Published On 2019-11-07 11:27 GMT   |   Update On 2019-11-07 11:27 GMT
மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை பற்றி உண்மைக்கு புறம்பான, ஒரு அவதூறான, அநாகரீகமான செய்திகளை அவராக கற்பனையில் தெரிவித்துள்ளார். பாண்டியராஜனுக்கு குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்வது எல்லாம், அநாகரீகத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதுவும் குறிப்பாக அமைச்சரவையில் உள்ளவர் கீழ்த்தரமான ஒரு செய்தியை வெளியிட்டு தன்னை விளம்பரப்படுத்துவதின் மூலம் எதுவும் சாதித்து விடலாம் என்ற அடிப்படையில் அவரது செயல்பாடுகள் உள்ளது தெரிய வருகிறது.

கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு இயக்கங்களில் மாறி மாறி கடைசியாக அமைச்சர் பதவி கிடைத்தால்போதும் என்று முதல்வர் எடப்பாடியின் காலில் விழுந்தவர். அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகக்கூடிய பாண்டியராஜன், தலைவர் மு.க. ஸ்டாலினை அவதூறு பேசியதை கண்டிக்கிறோம்.

அவர் மிசா கொடுமையில் ஆளாக்கப்படவில்லை. வேறு வழக்கில் கைது செய்தார்கள் என்று கற்பனையில் உண்மையை திருத்தி பேசி உள்ளார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு கலைஞரால் பாராட்டப்பட்டு அதற்கு பிறகு பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து படிப்படியாக உயர்ந்துள்ளார்.

யாரோ ஒருவரை மகிழ்விக்க, வேறு பதவியில் ஒட்டிக்கொள்ள நாகரீகமற்ற அரசியல் தமிழகத்தில் நடக்கிறது. அமைச்சர் பாண்டியராஜன் குமரி மாவட்டத்தில் வருகை தரும் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News