பொம்மையார்பாளையத்தில் சுற்றுலா பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
சேதராப்பட்டு:
புதுவை அருகே உள்ள பொம்மையார்பாளையம் (ஆரோவில்) கடற்கரையில் தினந்தோறும் ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் .
அது போல் சம்பவத்தன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி சுற்றுலா பயணிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் பணம் கேட்டு மிரட்டியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சுற்றுலா பயணிகளிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வர்கள் பொம்மையார்பாளையத்தை சேர்ந்த ராகுல் (வயது 21) மற்றும் அலையரசு (22) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் 2 பேரும் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.