ராஜபாளையத்தில் தீபாவளி விருந்துக்கு அழைக்காத மைத்துனரை தாக்கிய புதுமாப்பிள்ளை கைது
ராஜபாளையம்:
ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 21), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாரி (20) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
தலை தீபாவளி கொண்டாட மனைவி வீட்டில் விருந்துக்கு அழைப்பார்கள் என சரவணன் எதிர்பார்த்தார். ஆனால் யாரும் அழைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர், தீபாவளி நாளில் வெளியே சென்றபோது முத்துமாரியின் சகோதரர் அய்யனார் (20) எதிரே வந்தார். அவரிடம் விருந்துக்கு அழைக்காதது ஏன்? எனக்கேட்டு சரவணன் வாக்குவாதம் செய்தார்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர், உருட்டுக்கட்டையால் தாக்கியதாக ராஜபாளையம் தெற்கு போலீசில் அய்யனார் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புதுமாப்பிள்ளை சரவணனை கைது செய்தார்.
மதுரை பாண்டியன் நகர் மருதுபாண்டியனார் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (30).இவரது மனைவி சுப்புலட்சுமி (25). இவர்கள் தீபாவளி விருந்துக்காக ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியில் உள்ள சுப்புலட்சுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர்.
தீபாவளி விருந்தில் பங்கேற்று விட்டு ‘பிகில்’ படம் பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். டி.டி.மில் ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முத்தையா, அவரது மனைவி சுப்புலட்சுமி காயம் அடைந்தனர். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கலங்காபேரியைச் சேர்ந்த ராஜாகனி (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.