search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride groom"

    ஆலங்குடி அருகே மணமகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் நிறுத்தியுள்ளனர். #DengueFever

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

    கடந்த வாரம் பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது.

    அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நேற்று, திருமணம் நடத்த திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. மணமகன் பாண்டியனை உறவினர்கள் அழைத்து வர சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டது.

    தற்போது காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. வெளியே சென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

    இதனால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை இரு வீட்டாரும் பேசி ஒத்தி வைத்து விட்டனர். மீண்டும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். இதற்கிடையே திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தகவலறிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். #DengueFever

    தர்மபுரியில் மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த போது திருமணத்துக்கு முதல் நாள் மதியம் மணமகள் தனது காதலனுடன் சென்று விட்டதால் திருமணத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்தனர்.

    காதலனுடன் ஓடிய மணப்பெண் தருமபுரியில் உள்ள திருப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர். மணமகன் தருமபுரி காந்தி நகரை சேர்ந்தவர். நேற்று முன்தினமே மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் உறவினர்களுக்கும், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட மண்டப வேலையாட்களிடம் தகவலை தெரிவித்து திருமண நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் புதுமை வேந்தன். இவருக்கும் பொன்னேரி என்.ஜி.ஓ. நகரில் வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் செங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது.

    இரு வீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் திடீரென மாயமானார்கள். அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    இதனை அறிந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பினரின் செல்போன்களில் தொடர்பு கொண்ட போது அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் “நிச்சயதார்த்தம் நடந்த போது புதுப்பெண்ணுக்கு 4 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தோம்“ என்று தெரிவித்து உள்ளனர்.

    நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் குடும்பத்துடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுப் பெண்ணின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததால் குடும்பத்துடன் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்தாமரைகுளத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் கலக்கத்தில் உள்ளனர்.
    தென்தாமரைகுளம்:

    தென்தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் தங்ககுமார் (வயது 33). தங்ககுமார் சிவகாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பேசி நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் நாளை (17-ந் தேதி) நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்காக தங்ககுமாரின் பெற்றோர்கள் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தனர். நேற்று முன்தினம் தங்ககுமார் ஆரல்வாய்மொழியில் உள்ள நண்பர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார். இதற்காக ஒரு காரில் நேற்று ஆரல்வாய்மொழி சென்றார். அதன்பிறகு தங்ககுமார் வீடு திரும்பவில்லை. நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் தங்ககுமார் வீடு திரும்பாதது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் பல இடங்களிலும் தங்க குமாரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தங்ககுமாரின் தந்தை ராஜலிங்கம், இது பற்றி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். மேலும் தங்க குமாரின் செல்போன் எண்ணையும் கொடுத்தார். அந்த எண் மூலம் போலீசார் தங்ககுமாரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதில் அவரது செல்போன், தஞ்சாவூர் பகுதியில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் நாகர்கோவிலில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள டோல்கேட்களில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். இதில் தங்ககுமாரின் கார் அந்த டோல்கேட்களை தாண்டி சென்றிருப்பது உறுதியானது.

    இதையடுத்து புது மாப்பிள்ளை தங்ககுமார் தஞ்சாவூரில் இருப்பதை உறுதி செய்த போலீசார் நேற்றிரவே அவரை தேடி தஞ்சாவூர் புறப்பட்டனர். மேலும் அவர் எதற்காக தஞ்சாவூர் சென்றார் என்றும் விசாரித்தனர்.இதில் தங்ககுமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததாகவும்,அந்த பெண் தங்ககுமாரை திருமணம் செய்ய மறுத்ததால், தங்ககுமார் வேறுபெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது.

    தங்ககுமாருக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்த அவரது காதலி, மனம் மாறி அவரை திருமணம் செய்ய இங்கு வந்திருக்கலாம் என்றும், அவருடன் தான் தங்ககுமார் தஞ்சாவூர் சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள். தங்ககுமாரை கண்டு பிடித்த பின்னரே இதற்கான காரணம் தெரியவரும். இதையடுத்து நாளை அஞ்சுகிராமம் பெண்ணுடன் நடக்க இருந்த திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் கலக்கத்தில் உள்ளனர்.
    வன்னியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 27). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் இனிப்பகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து, வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்கிருந்த பாலத்தில் மோதியது.

    இந்த விபத்தில் சேகர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாணை நடத்தினர்.

    பலியான சேகருக்கு வருகிற (7-ந் தேதி) திருமணம் நடக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி அருகே திருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால் மணப்பெண்ணை கற்பழித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் புதுமாப்பிள்ளை வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    பண்ருட்டியை அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (23). இவருக்கும், விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா திடீரென்று காணாமல் போனார். இதனால் கவலையடைந்த கோதண்டபாணி தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மாயமான ரம்யா என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் ரம்யாவை, விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயகுமாரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் ரம்யாவை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் விஜயகுமார் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு:-

    நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    எங்களது திருமணம் 20-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ரம்யாவுடன் நான் செல்போனில் அடிக்கடி பேசி வந்தேன். அப்போது அவரது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருந்து வந்தது.

    இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவரது செல்போன் பழுதாகி இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் ரம்யாவின் செல்போன் அடிக்கடி பிசியாக இருந்தது. யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இதனால் அவர் மேல் சந்தேகம் அடைந்தேன்.

    கடந்த 13-ந் தேதி இரவு ரம்யாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரம்யா வெளியே வந்தார். மோட்டார் சைக்கிளில் ரம்யாவை அழைத்துச் சென்றேன்.

    இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அப்போது அங்கு நாங்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த நான், ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த ரம்யாவை கற்பழித்தேன்.

    இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு ரம்யாவை தூக்கி சென்றேன். பின்னர் அவளை கிணற்றில் தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் ரம்யா இறந்து விட்டார். இதையறிந்ததும் நான் ஒன்றும் தெரியாதது போல் எனது வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான விஜயகுமாரை போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×