திருச்சியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வடமாநில வாலிபர்கள் கைது
திருச்சி:
திருச்சி அருகே உள்ள பெருகமணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது 25). இவர் தனக்கு சொந்தமான விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிளை தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தியிருந்தார். இரவில் மோட்டார் சைக்கிள் திடிரென மாயமானது. இது குறித்து கார்த்திக்கேயன் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்பூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் திருச்சி பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வருவதைபார்த்து சந்தேகம் அடைந்தனர்.
இது குறித்து வாலிபர்களை மடக்கி விசாரணைநடத்தினர். அப்போது 2 பேரும் திருச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு: ஆரீப்கான் (வயது 19), அப்துல்கயூப் (19). இருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
2 பேரும் திருப்பூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு லாரியில் தீபாவளி ஜவுளி ஏற்றி வந்துள்ளனர். திருச்சியில் பிரபல ஜவுளி கடைக்கு ஜவுளிகளை இறக்கி விட்டு மீண்டும் லாரியில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் திருச்சி பெருகமணியில் மெயின் ரோட்டில் ஒரு வீட்டு முன்பு புத்தம்புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்ததும் அதை திருடி உள்ளனர். லாரியில் தூக்கி போட்டு கொண்டு திருப்பூருக்கு எடுத்து சென்றனர். கடைசியில் போலீசில் சிக்கி கொண்டனர்.