கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைபெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வனத்துறையினர் தடை விதித்தனர்
இதனால் பில்லர் ராக், குணாகுகை, தூண்பாறை, மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்கள் பூட்டப்பட்டன. இப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டு வன காவலர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டனர். ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கன மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் பலத்த காற்றுடன் சாரல் மழையே பெய்தது.
தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை பார்வையிட வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.