மல்லிப்பட்டினம் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் புது மனை தெருவைச் சேர்ந்தவர்கள் அழகர் (வயது45) சின்னத்தம்பி (வயது52). உறவினர்களான இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் அறந்தாங்கியில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை சின்னத்தம்பி ஓட்டி வந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரவு 8 மணியளவில் மனோரா அருகே வந்த போது குறுக்கே வந்த மாடு மீது நிலை தடுமாறி மோதியது. இதில் கீழே விழுந்த அழகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சின்னத்தம்பி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் மாடும் சம்பவ இடத்திலேயே பலியானது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.