சங்ககிரி அருகே விபத்து: 2 தறித் தொழிலாளிகள் பலி
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சாந்த குமார். (வயது 45). இவரது நண்பர் திருச்செங்கோட்டை சேர்ந்த முருகன் (வயது 50) இவர்கள் இருவரும் தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சாந்தகுமாரின் 3 வயது மகள் பரணிக்கு உடல்நிலை சரியில்லை, இவர்கள் மோட்டார் சைக்கிளில் பரணியை அழைத்து கொண்டு சேலம் அரியனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அப்போது மேட்டுக்கடை என்ற இடத்தில் வந்தபோது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சாந்தகுமார், முருகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். குழந்தை பரணி லேசான காயம் அடைந்தது. அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான சாந்தகுமார் மற்றும் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை போலீசார் அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.