செய்திகள்
பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளான போலீஸ் வேன்.

திருவாரூர் அருகே போலீஸ் வேன் மரத்தில் மோதி 6 ஆயுதப்படை போலீசார் படுகாயம்

Published On 2019-10-01 11:39 GMT   |   Update On 2019-10-01 11:39 GMT
திருவாரூர் அருகே பனை மரத்தில் போலீஸ் வேன் மோதியதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே பனை மரத்தில் போலீஸ் வேன் மோதியதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நாகப்பட்டினத்தை சேர்ந்த, ஆயுதப்படை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த நாகப்பட்டினத்திற்கு அழைத்து வருவதற்காக காவல் துறைக்கு சொந்தமான வேனில் புறப்பட்டனர். வாகனத்தை காவல்துறை டிரைவர் தினேஷ்குமார் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் திருவாரூர் அருகே நாகப்பட்டினம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரணபாலம் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தது., அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதில் டிரைவர் தினேஷ்குமார், வேனில் பயணம் செய்த முகமது அசாருதீன், ராஜ்குமார், மகாலிங்கராஜ், மஞ்சுநாத், அசாருதீன் ஆகிய ஆயுதப்படை போலீசார் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக திருவாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News