செய்திகள்
மழை நிலவரம்

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2019-09-28 02:50 GMT   |   Update On 2019-09-28 02:50 GMT
தென்மேற்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி, அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இன்று (நேற்று) வரையிலான கால கட்டங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தற்போதைய இயல்பு அளவு 33 செ.மீ. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.



சென்னையை பொறுத்தவரையில் இந்த காலகட்டத்தில் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. தற்போதைய இயல்பான அளவு 42 செ.மீ. இது இயல்பை விட 39 சதவீதம் அதிகம் ஆகும். இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிந்து இருக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 53 சதவீதம் அதிகமாகும். தென்மேற்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி, அடுத்த மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கக்கூடிய நிலையில் தான் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் 20-ந்தேதி தான் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News