செய்திகள்
திருச்சி கொள்ளிடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
திருச்சி கொள்ளிடத்தில் நடந்து சென்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி அருகே உள்ள கொள்ளிடம் பணமங்கலம் குளத்தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 60). விவசாயியான இவர் நேற்று மாலை வேலை முடிந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கொள்ளிடம்-பணமங்கலம் இடையே ரோட்டு ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செல்லமுத்து பலத்த காயம் அடைந்தார். அவர் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்த தப்பி சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் செல்லமுத்துவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்லமுத்து இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கதிர்வேலு கொள்ளிடம் போலிசில் புகார் செய்தார். செல்லமுத்து மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.