செய்திகள்
தென்திருப்பேரை அருகே வாய்க்காலில் விழுந்து வாலிபர் பலி
தென்திருப்பேரை அருகே குளிக்க சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே உள்ள புளியமரத்தெரு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 30). இவர் திருச்சியில் தங்கியிருந்து கூல்டிரிங்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் குலசை தசரா விழா வருவதால் அதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கோவிலுக்கு மாலைபோட்டு விரதம் இருந்துவந்தார்.
இதையடுத்து இன்று காலை அவர் அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் பலியான ரமேஷ் உடலை போலீசார் மீட்டு தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.