செய்திகள்
நகை திருட்டு

ஆட்டோவில் சென்றபோது மூதாட்டியிடம் நகை திருட்டு - 2 பெண்கள் கைவரிசை

Published On 2019-09-09 07:11 GMT   |   Update On 2019-09-09 07:11 GMT
திருவொற்றியூர் அருகே ஆட்டோவில் சென்றபோது மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (65). நேற்று மதியம் அவர் மார்க்கெட் தெருவில் இருந்து காலடிப்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது இரு பெண்கள் ஆட்டோவில் ஏறினர். அப்போது திடீரென்று பூங்கா வனம் கழுத்தில் அணிந்திருந்த, 9 சவரன் செயின் அறுந்து விழுந்தது.

சுதாரித்துக் கொண்ட பூங்காவனம் செயினை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவரிடம் இரண்டு பெண்களும் சம்மந்தம் இல்லாமல் பேசிக் கொண்டே வந்தனர்.

காலடிப்பேட்டை வந்தவுடன் பூங்காவனம் ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி பார்த்த போது, பையில் வைத்திருந்த செயினை காணவில்லை.

மூதாட்டி பூங்காவனத்துடன் பயணித்த 2 பெண்களும் செயினை கத்தரித்து திருட முயன்றுள்ளனர். மூதாட்டி சுதாரித்து செயினை பையில் போட்டு வைத்திருந்த போதும் அவரின் கவனத்தை திசை திருப்பி செயினை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News