திருவாரூர் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்தது- 20 பயணிகள் காயம்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை 11.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
மதியம் 12 மணியளவில் திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடி என்ற இடத்தில் பஸ் சென்ற போது ஒரு லாரியை முந்தி செல்ல டிரைவர் முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. இதில் திடீரென சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் பஸ் பாய்ந்து கவிழ்ந்தது.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..’’ என்று கூக்குரலிட்டனர். இதனால் சத்தம் கேட்டு அங்கு நின்ற கிராம மக்கள் ஓடி வந்தனர். உடனடியாக வாய்க்காலில் இறங்கி, பஸ்சில் இருந்த பயணிகளை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 20 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களது பெயர், விவரம் உடனடியாக தெரிய வில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயம் அடைந்த அனை வரையும் மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வடபாதிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நல்லவேளையாக வாய்க்காலில் தண்ணீர் குறைந்த அளவே இருந்ததால் இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்துக்கு குறுகிய சாலையே காரணம் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் டிரைவர் வேகமாக பஸ்சை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.