கோயம்பேட்டில் வேனில் கஞ்சா கடத்திய ரவுடி கைது
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள “ஏ” சாலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக மினி வேன் மற்றும் அதிலிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தி வந்தது அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த அஜித் என்கிற அஜித்குமார் என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் அரும்பாக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அஜித்குமார் கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. யாரிடம் கஞ்சா வாங்கி வந்தார்? அதை யாருக்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.