search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy Arrest"

    • குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 12,723 வழக்குகளும் ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எல்லையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்ட மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகளுக்கு சென்று கடும் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட போலீசார் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கடை சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க சென்றனர்.


    அப்போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 5 நபர்களை சுற்றி வளைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25), கவியரசன் (30), புதுக்கடை சேர்ந்த வேல்முருகன் (27), சந்தோஷ் (21), கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும், தப்பியோடியது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டியதாக தெரியவந்தது. இது மட்டுமன்றி இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.
    • அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடியை கைது செய்தனர்.

    சென்னை :

    அசோக் நகர், அடுத்த புதூர் 14-வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ரூபாவதி. தே.மு.தி.க சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

    நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ரவுடி விக்கி என்கிற விக்னேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
    • ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 'ஸ்ட்ராமிங் ஆபரேஷன்' செய்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் பழைய குற்றவாளிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகைகளில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். இதில் இன்று ஒரே நாளில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலைக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு ரவுடி ஒருவன் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் அந்த ரவுடி யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன ரவுடி அரவிந்தன் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு அரவிந்தன் கத்தியை காட்டி மிரட்டி டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்

    அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார் அரவிந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது ரவுடிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அன்பரசனை பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவரது தம்பி மகன் அன்பரசனை புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.

    இந்த கொலை வழக்கின் விசாரணைக்கு யாரும் சாட்சி சொல்ல வரக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட அன்பரசனின் உறவினர் சேகர் என்பவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கத்தியை கழுத்தில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை அதிரடியாக கைது செய்தனர்.

    • போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி என்பது தெரிந்தது.

    தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது அவருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபர் புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி (22) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து கத்தி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சொகுசு பங்களா கட்டி வரும் நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.
    • வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சுரேசின் வலது கையாக செயல்பட்டு வந்துள்ளார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கொடுவாய் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் ஒருவர் சொகுசு பங்களா கட்டி வந்தார்.ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் தனியாக வீடு கட்டி வந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சகல வசதிகளுடன் பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டப்பட்டு வந்தது. வீட்டை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, 90 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.

    அந்த வீட்டை கட்டுபவர் யார் என்று பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சொகுசு பங்களா கட்டி வரும் நபர் சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    அவர் மீது சென்னை கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10 கொலை வழக்குகள் மற்றும் 15 கொலை முயற்சி வழக்குகள், திருட்டு வழக்குகள் என 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

    ஒரு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ஜனா அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கொடுவாய் பகுதியில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததுடன், கொள்ளையடித்த பணத்தில் ரூ.1கோடிக்கு சொகுசு பங்களா கட்டி வந்துள்ளார்.

    இதையடுத்து ஜனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை போலீசார் காங்கயம் வந்து ஜனாவை அழைத்து சென்றனர்.

    கைது செய்யப்பட்ட ஜனா, போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சூச்சி சுரேசின் வலது கையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

    • மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
    • கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அதில் தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

    அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

    இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரணை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    • பார்த்தீபன் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • டேவிட்டின் குடும்பத்தினர் பார்த்தீபனிடம் செல்போனை திருப்பி கொடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது21). ஓட்டல் தொழிலாளி.

    செல்போன் பறிப்பு

    இவர் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதி 4-வது தெருவை சேர்ந்த டேவிட் (22) என்பவர் வழிமறித்து பணம் கேட்டார்.

    அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பார்த்தீபனிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றார்.

    தொடர்ந்து அவரது வீடடிற்கு சென்று இது குறித்து கேட்டபோது டேவிட்டின் குடும்பத்தினர் பார்த்தீபனிடம் செல்போனை திருப்பி கொடுத்துள்ளனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் வேலை முடிந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மீண்டும் வழிமறித்த டேவிட் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

    ரவுடி கைது

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர். டேவிட் மீது முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   

    • மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம், ஜம்பராபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் பந்தல்குடி ராஜேஷ் (வயது 30). இவர் மீது தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பந்தல்குடி ராஜேஷ், தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலை கடந்த ஆண்டு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் "என் கை, கால்களை உடைக்க வேண்டும் என்று சொல்லி திரிகிறாயாமே? ஆம்பளையா இருந்தா காக்கி சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா, நாம் ஒத்தைக்கு ஒத்தையாக சண்டை போட்டு பார்க்கலாம். நீ எங்கே இருக்கேனு சொல். நான் வருகிறேன்" என்று மிரட்டினார்.

    பந்தல்குடி ராஜேஷ்-போலீஸ் ஏட்டு செந்தில் இடையேயான ஆடியோ உரையாடல், அப்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

    இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பந்தல்குடி ராஜேஷை கைது செய்வதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிகுந்தகண்ணன், சண்முகநாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பந்தல்குடி ராஜேஷை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்தனர். ஆனாலும் அவர் பிடிபடவில்லை.

    இதற்கிடையே பந்தல்குடி ராஜேஷ் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே அவரை கையும் களவுமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் பந்தல்குடி ராஜேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை ஜம்புராபுரம் வீட்டுக்கு வந்து இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. எனவே போலீசார் நேற்று இரவு ஜம்புராபுரம் வீட்டுக்கு சென்றனர். அப்போது பந்தல்குடி ராஜேஷ் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும், பந்தல்குடி ராஜேஷ் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், "எனக்கு நரம்பு நோய் பிரச்சனை உள்ளது. இதற்காக கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அந்த நோய் குணமாக ஓராண்டு காலம் பிடித்தது. அதன் பிறகு நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை திரும்பினேன்.

    இங்கு வந்த பிறகு தான் போலீசார் என்னை தேடுவது தெரிய வந்தது. நான் தனிப்படை போலீஸ் ஏட்டு செந்திலிடம் மிரட்டலாக பேசியது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சி உள்ளார்.

    பந்தல்குடி ராஜேஷ் மீது கொலை முயற்சி உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அவரிடம் இது தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை போலீசுக்கு சவால் விட்ட பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரவுடியை பிடித்த தனிப்படை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியைச் சேர்ந்தவன் குருவி விஜய் (வயது 27), பிரபல ரவுடியான இவன் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதனால் போலீசார் அவனை தேடி வந்தனர். இதையறிந்த குருவி விஜய் கடலூர், தென்காசி மாவட்டங்களுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினான். அங்கும் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தான். இதனால் அவன் மீது அங்குள்ள போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாயின.

    இந்த நிலையில் நேற்று இரவு குருவி விஜய் மதுரை வந்தான். பின்னர் அவன் தனது நண்பரான வண்டியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த கார்த்தி என்ற மவுலி (28) என்பவருடன் சேர்ந்து செண்பக தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே அமர்ந்து மது குடித்துக் கொணடிருந்தான்.

    அப்போது அண்ணாநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த 24 வயது பெண் தனது மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு திரும்ப முயன்றார்.

    அவர் மொபட்டில் வருவதை பார்த்ததும் குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை வழிமறித்தனர். இதனால் பயந்து போன அந்த பெண் மொபட்டை நிறுத்தினார். உடனே 2 பேரும் அவரை தங்களுடன் வருமாறும், இல்லையென்றால் கத்தியால் குத்திக்கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். பின்னர் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

    இதனால் பயத்தில் அந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்த அவரது மாமா அங்கு ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். உடனே 2 ரவுடிகளும் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைக்குலைந்த அவர் கீழே விழுந்தார். உடனே அவர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    ஆனால் போதையில் இருந்த குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை தரதரவென் இழுத்துச் சென்று பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த வேனுக்குள் தள்ளினார்கள். பின்னர் 2 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி அறிந்த அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரவுடிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது கற்களை எடுத்து சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்த கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் ரவுடி குருவி விஜய் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அலறி அடித்து ஓடி அவன் கீழே விழுந்தான். உடனே போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

    அவனது கூட்டாளி கார்த்தி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தான். அப்போது அவன் கீழே தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவனையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான கார்த்தி மீதும் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    குண்டு காயம் ஏற்பட்ட ரவுடி குருவி விஜய் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×