search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TikTok"

    • 2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டிக் செயலிக்கு தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார்.
    • தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியுள்ளது.

    உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு செயலிகளும் பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நடைமுறை சாத்தியமான உளவு நடவடிக்கை என சில நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் இது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவித்தன.

    இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கடந்த 2020-ல் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்காவின் சில மாநிலங்கள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. மேலும், அமெரிக்கா முழுவதும் இந்த செயலியை தடைவிதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.

    அப்போது அமெரிக்கா சார்பில் டிக்டாக் செயலியை சீன நிறுவனம் விற்பனை செய்தால் அமெரிக்காவில் செயல்பட தடையில்லை எனத் தெரிவித்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனம் மறுத்து வந்தது.

    அதன்பின் டிக்டாக் செயலி தடை குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் டிக்டாக் தடை குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது.

    அதன்படி நேற்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். 65 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா சென்ட் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு அதிபரின் கையெழுத்திற்கான வெள்ளை அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டதும் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்.

    டிக்டாக் செயலின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) டிக்டாக் செயலில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் என அந்த மசோதா குறிப்பிடுகிறது. டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடந்து செயல்பட வேண்டுமென்றால் பைட்டான்ஸ் அதனை விற்பனை செய்ய வேண்டும்.

    இதற்கு முன்னதாக 2020-ல் டொனால்டு டிரம்ப் இந்த செயலிக்கு தடைவிதிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றம் தலையீடு காரணமாக அது வெற்றி பெற முடியாமல் போனது.

    • பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன.
    • 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் பலரும் சிக்கல்களை சந்திப்பதாக பொதுவாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகளும் ஏற்படுகின்றன.

    குறிப்பாக உலகெங்கிலும் உள்ள மக்களை எளிதில் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் வரமாக அமைந்துள்ளன. தனி நபர்கள் தொழில்முறையாக பல தொடர்புகளையும், நண்பர்களையும் உருவாக்க சமூக வலைதளங்கள் பாலம் அமைத்து தருகின்றன.

    அதேபோல பிரிந்துபோன உறவுகள், நண்பர்களை மீண்டும் சந்திக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன. அந்த வகையில் ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 வருடங்களுக்கு பிறகு டிக்டாக் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவை சேர்ந்தவர் அனோசர்தானியா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து டிக்டாக் வீடியோவை பெற்றார். அந்த வீடியோவில் சர்தானியாவை போன்றே நீல நிற முடியுடன் ஒரு பெண் விளையாடும் காட்சி இருந்தது.


    முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார். அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.

    மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து சர்தானியா சமூக வலைதளங்களில் பதிவிட்டு விசாரித்தபோது, அதில் இருக்கும் பெண் எமி க்விட்டியா என்பதும், அனோ சர்தானியாவும், எமியும் இரட்டையர்கள் என்பதும் பிறக்கும்போதே அவர்கள் பிரிந்ததும் தெரியவந்தது. அதாவது, 2002-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இரட்டையர்களின் தாயாரான ஆஷாசோனி இவர்களை பெற்றெடுத்துள்ளார்.

    அப்போது அவரது உடல்நிலை கோமா நிலைக்கு செல்லவே இரட்டையர்களின் தந்தையான கோச்சா ககாரியா அனோவையும், எமியையும் தனிதனி குடும்பங்களுக்கு விற்றுவிட்டார்.

    இதனால் அனோ ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசி பகுதியிலும், எமி அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூக்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடமும் தனித்தனியாக வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் டிக்டாக் வீடியோ மூலம் சுமார் 19 ஆண்டுகள் கழித்து இரட்டையர்களான அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

    • இந்தியா 2020ல் இந்த செயலியை தடை செய்து விட்டது
    • வெறுப்பு உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்

    சீனாவின் "பைட்டேன்ஸ்" (ByteDance) எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது "டிக்டாக்" (TikTok) எனும் மென்பொருள் செயலி. 3 நொடிகளில் இருந்து 10 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய வீடியோக்ளை பயனர்கள் பதிவேற்றம் செய்யவும், கண்டு ரசிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், இச்செயலியின் செயல்பாடுகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 4 வருடங்களில் இதன் காரணமாக 1647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதை குறித்து ஆலோசிக்க நேபாள காவல்துறையின் சைபர் குற்ற பிரிவு, உள்துறை மற்றும் சீன செயலி நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று நேபாளம், சமூக கட்டமைப்பை குலைக்கும் ஆபத்து உள்ளதால் டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது.

    தொழில்நுட்ப வழிமுறைகள் நிறைவடைந்ததும் தடை முழுவதுமாக செயலாக்கப்படும் என்றும் எந்த தேதியிலிருந்து தடை அமலுக்கு வரும் எனும் செய்தி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரேகா ஷர்மா அறிவித்தார்.

    இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இதற்கு பதிலாக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதித்து அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா கூறியுள்ளார்.

    இந்தியா, டிக்டாக் செயலியை 2020-ஆம் ஆண்டே தடை செய்து விட்டது. அப்போது அச்செயலிக்கு 10 கோடிக்கும் மேல் பயனர்கள் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மேலை நாட்டு நிறுவனங்கள் நேபாளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக கட்டாயம் அலுவலகங்கள் அமைத்தாக வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது.

    • டிக்டாக் செயலியில் இணைந்து விட்டதாக விவேக் செப்டம்பரில் கூறியிருந்தார்
    • அவரது மகளே இதை பயன்படுத்துகிறார் என விவேக் பதில் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் இறங்குவார்கள். தற்போது அங்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார்.

    வரவிருக்கும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் எவரை முன்னிறுத்துவது என அக்கட்சியினர் முடிவு செய்ய, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பங்கு பெறும் பல விவாத நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம். அவற்றில் பங்கு பெறும் ஓவ்வொருவரும் அமெரிக்காவின் முன் உள்ள சவால்களையும், அதனை எதிர்கொள்ள அவர்கள் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குவார்கள். இந்த விவாதத்திற்கு பிறகு கட்சியில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். அதன் பின் ஒருமனதாக ஜனநாயக கட்சிக்கு எதிராக அந்த வேட்பாளர் களம் நிறுத்தப்படுவார்.

    தற்போதைய நிலவரப்படி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுவரை குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சிகள் 2 நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவதாக அமெரிக்காவின் மியாமி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சந்திப்பு நேற்று நடந்தது.

    இதில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி, ரான் டிசான்டிஸ், கிரிஸ் கிரிஸ்டீ, டிம் ஸ்காட் ஆகிய வேட்பாளர்கள் பங்கு பெற்றனர்.

    விவேக் ராமசாமி, கடந்த செப்டம்பர் மாதம், சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) உருவாக்கிய பிரபல டிக்டாக் (TikTok) எனும் செயலியை பயன்படுத்த அதில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இள வயது வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், சீன மென்பொருள் செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரச்சாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், விவேக் இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

    நேற்றைய சந்திப்பில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

    அப்போது பதிலளித்த விவேக், "நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின் போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்" என கூறினார்.

    அப்போது இடைமறித்த நிக்கி, "என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிவு" என கடுமையாக கூறினார்.

    இதனை கேட்ட பார்வையாளர்கள் கை தட்டி இக்கருத்தை வரவேற்றனர்.

    அதற்கு மீண்டும் பதிலளித்த விவேக், "அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்" என பதிலளித்தார்.

    மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் விவாதங்கள் மேடை நாகரிகத்திற்கு ஏற்ப கண்ணியமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், அங்கும் சமீப காலமாக தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதும், ஒருவரையொருவர் கடும் சொற்களால் தாக்கி கொள்வதும் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்-டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

    இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன.

    மக்கள் பார்வை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

    தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர் ஆகிய இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிக்டாக செயலி மூலம் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல்
    • விதிவிலக்குடன் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை இருந்து வருகிறது

    சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த செயலியின் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. டிக்டாக் செயலி மூலம் தரவுகளை திருடுவதாகவும், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சீன அரசு மீது பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் டிக்டாக் செயலி நிறுவனம் மற்றும் சீன அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தன.

    என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்கா கடந்த 2022-ல் சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலியை அரசு சாதனங்களில் பயன்படுத்த தடைவிதித்தது.

    இந்த நிலையில் நியூயார்க் மாநில நிர்வாகம் அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

    பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நியூயார்க் மேயருக்கான செய்தி தொடர்பாளர் ஜோனா ஆலோன் ''டிக்டாக் செயலிலால் நகரின் டெக்னிக்கல் நெட்வொர்க்கிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பிரிவு தெரிவித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

    நியூயார்க் மாநலம், மூன்று வருடத்திற்கு முன்னதாக சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு ரவுடி ஒருவன் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் அந்த ரவுடி யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன ரவுடி அரவிந்தன் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு அரவிந்தன் கத்தியை காட்டி மிரட்டி டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்

    அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார் அரவிந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது ரவுடிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த ஜஸ்டின் மில்லர் அதனை 50 டாலருக்கு வாங்கி உள்ளார்.
    • பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் மில்லர். டிக்டாக் பிரபலமான இவர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த இவருக்கு பழம்பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்தது.

    இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியில் ஏதோ சிறப்பு இருப்பதாக உணர்ந்த அவர் அதனை 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) வாங்கி உள்ளார்.

    பின்னர் அந்த நாற்காலியை சீரமைக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். அதன்பிறகு பழம்பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்தில் நாற்காலியை கொண்டு சென்றுள்ளார். பழமையான அந்த நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) ஏலம் போனது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.
    • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

    லண்டன்:

    அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் பிரிட்டனிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார்.

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படும். 

    • அமெரிக்கா, கனடாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெல்ஜியத்திலும் டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரசெல்ஸ்:

    அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பெண்கள் ‘டிக் டாக்’ மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்களில் இன்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக 'டிக்டாக்' வலைதளம் மூலம் 'யூ-டியூப்'பில் தங்கள் திறமைகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருவது தான் வேதனையான விஷயம். பெண்கள் 'டிக்டாக்' மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

    இது போல ஆபத்தில் சிக்கி வாழ்வை இழந்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஒருவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் கேரளாவில் பிரபலமான 'டிக்டாக்' நடிகராக உள்ளார். இவர் 'டிக்டாக்'கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் அது சில நிமிடங்களிலேயே பெரிதாக வைரலாகிவிடும்.

    இதனால் இவரது 'டிக்டாக்' கிற்கு மவுசு அதிகம். குறிப்பாக கல்லூரி மாணவிகள், பெண்கள் இவருக்கு ரசிகைகளாக உள்ளனர். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவர், வினீத்துக்கு நெருக்கமாகி உள்ளார். இருவரும் அடிக்கடி 'வீடியோ கால்' மூலம் பேசி வந்துள்ளனர்.

    அப்போது மாணவிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வினீத் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் 'டிக்டாக்'கில் பிரபலமடைவது எப்படி? என சொல்லித் தருகிறேன் என மாணவியிடம் கூறிய வினீத், அவரை திருவனந்தபுரம் வருமாறு கூறியுள்ளார்.

    இதனை நம்பிய மாணவியும் திருவனந்தபுரம் வந்தார். மாணவியை சந்தித்த வினீத், தான் கார் வாங்கப் போவதாகவும் அதற்கு உடன் வரும்படியும் கூறினார். மேலும் முகத்தை கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என லாட்ஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம், தான் வைத்திருந்த அவரது ஆபாச படங்களை காட்டியுள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அந்த படங்களை காட்டி மாணவியை மிரட்டி வினீத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதற்கிடையில் வினீத்தின் செல்போனை, மாணவி பார்த்த போது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.

    அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் மேலும் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் வினீத்தின் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட வினீத், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வினீத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    வீடியோ பகிர்ந்து கொள்ளும் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2019 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஆப் ஸ்டோரில் உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் இருக்கிறது.

    சென்சார்டவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2019 முதல் காலாண்டில் மட்டும் ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3.3 கோடி பேர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர ஆப் ஸ்டோரில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

    கடந்த ஒரு காலாண்டில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் 88.6 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். இவற்றில் 99 சதவிகித டவுன்லோடுகள் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    ×