செய்திகள்
தற்கொலை

கோவையில் 2-வது மனைவி முதல் கணவருடன் சேர்ந்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2019-08-21 15:10 GMT   |   Update On 2019-08-21 15:10 GMT
கோவையில் 2-வது மனைவி முதல் கணவருடன் சேர்ந்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 39). இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். சிறிது காலத்துக்கு பின்னர் இவர்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராஜாராமை விட்டு அந்த பெண் பிரிந்தார். 2-வதாக மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இருவரும் சேர்ந்து பட்டணம்ரோட்டில் புதிதாக வீடு கட்டி வந்தனர். 

இந்நிலையில் 2-வது மனைவி பொள்ளாச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது முதல் கணவரை சந்தித்தார். இருவரும் மனம்விட்டு பேசினர். இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தனர். பொள்ளாச்சியில் இருந்து மனைவி வீடு திரும்பாதது குறித்து கேட்டபோது அவர் முதல் கணவருடன் சேர்ந்து வாழமுடிவெடுத்ததை கூறினார். அதிர்ச்சியடைந்த ராஜாராம் இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துபேச்சு வார்த்தை நடத்தினர். விவாகரத்து பெறவில்லை என்பதால் முதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்று கூறினர். 2 மனைவிகள் பிரிந்ததால் விரக்தியடைந்த ராஜாராம் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜாராம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News