செய்திகள்
மரணம்

ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி கொலையா?

Published On 2019-08-16 07:11 GMT   |   Update On 2019-08-16 07:11 GMT
ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த செட்டி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 39). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று காலை மாரண்டஹள்ளியில் இருந்து பாலக்கோடு செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணம் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மாரண்டஹள்ளி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி மாது கொலை செய்யப்பட்டு அவரது பிணம் தண்டவாளத்தில் வீசப்பட்டதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட உறவினர்கள் நேற்று வீட்டில் இருந்த மாதுவை அழைத்து சென்று கொலை செய்துவிட்டு அவரது பிணத்தை தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும்.

கட்டிட மேஸ்திரி மாது கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் இன்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் அவர்கள் மறியலை கைவிட்டு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்றனர்.

Tags:    

Similar News