செய்திகள்
மழை நிலவரம்

ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Published On 2019-08-01 09:11 GMT   |   Update On 2019-08-01 09:11 GMT
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இப்போது அந்த மழையும் குறைந்து விட்டது.

சென்னை உள்பட வடமாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்தது. நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்தது. ஆனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

மீண்டும் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். ஓரிரு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை தூறல் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News