செய்திகள்
கைது

இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இன்று கைது

Published On 2019-07-22 10:16 GMT   |   Update On 2019-07-22 10:16 GMT
நாகர்கோவிலில் இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர்.

என்.ஜி.ஓ. காலனி:

நாகர்கோவில் வண்டிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 17). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் அஜித்குமாரும் (21) கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

என்.ஜி.ஓ. காலனி அருகே வந்தபோது ஒரு கும்பல் அவர்களது மோட்டார் சைக்கிளை வழி மறித்து அர்ஜூனையும், அஜித்குமாரையும் சரமாரியாக வெட்டியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினி பஸ்சில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அர்ஜூனும், அஜித்குமாரும் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.

இதுதொடர்பாக என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையைச் சேர்ந்த ரமேஷ் (30), ராமச்சந்திரன் என்ற மோகன், வண்டிக்குடியிருப்பு அழிச்சன் காட்டுவிளையைச் சேர்ந்த சுந்தர் (27), நிஷாந்த் (20) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

அவர்களில் ரமேஷ், சுந்தர் ஆகிய 2 பேரும் சென்னை தாம்பரத்தில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை சுசீந்திரம் போலீசார் ஒரு நாளில் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இரட்டைக் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிஷாந்த், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர்களில் நிஷாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். வல்லன்குமாரன்விளை பஸ் நிறுத்தத்தில் வெளியூர் செல்வதற்காக நின்றபோது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் 3-வது மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நிஷாந்த் நாகர்கோவிலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ராமச்சந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News