செய்திகள்
வெங்கையா நாயுடு

தொற்றா நோய்கள் தொடர்பாக தேசிய விழிப்புணர்வு தேவை - வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

Published On 2019-07-14 11:57 GMT   |   Update On 2019-07-14 11:57 GMT
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொற்றா நோய்கள் தொடர்பாக தேசிய அளவில் விழிப்புணர்வு இயக்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை:

சென்னை அமைந்தகரை பகுதியில் இன்று நடைபெற்ற புதிய தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, ‘ஒவ்வாத வாழ்க்கை முறைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் தொடர்பாக மக்களிடையே - குறிப்பாக பள்ளி, மாணவ-மாணவியைடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை இந்திய மருத்துவ சங்கம் முன்னெடுத்து நடத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

மேலும், 'தொற்றா நோய்களான புற்றுநோய், நீரிழிவுநோய் மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்களுக்காக சிகிச்சை பெறுவதற்கு நடுத்தர வர்ககத்தினர் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையை மாற்றவும் ஒவ்வொரு தனிநபரும் சிகிச்சைக்கு தேவையான பணத்துக்காக சிரமப்படாமல் தரமான சிகிச்சை பெறுவதற்கு வசதியாகவும் உலகளாவிய  அளவில் சுகாதார காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நமது நிலையான முன்னேற்றத்துக்கான இலக்கினை அடைவதற்கு இது மிகவும் அவசியமாகிறது.

சிசு மரணம், பிரசவக்கால மரணம் ஆகியவற்றை குறைப்பதிலும், எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதிலும் நாம் மிகப்பெரிய தன்னிறைவை எய்தி இருந்தாலும், தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவ மையங்கள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அதிகமாக அமைக்கப்பட வேண்டும். இத்தகைய மையங்களை அமைப்பதற்கு தனியார் துறை மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.
Tags:    

Similar News