குடவாசல் அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
குடவாசல்:
குடவாசல் அருகே ஆடிபுலியூரை சேர்ந்த ரவி என்பவரின் மகள் ரஷ்யா (வயது 22). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவரது தாய் ராஜம்மாள் நேற்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது மகள் ரஷ்யா வீட்டு வேலைகளை செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரஷ்யா எலிமருந்தை தின்று விட்டார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி ரஷ்யாவின் அண்ணன் ரவிக்குமார் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்த சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.