செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு

Published On 2019-07-08 10:17 GMT   |   Update On 2019-07-08 10:17 GMT
திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பத்மநாதன். இவர் அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

மல்லிகாவின் தம்பி மகேந்திரபூபதி அடுத்த வீட்டில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் நேற்று விஷேசத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50ஆயிரம் ஆகியவற்றை திருடினர். மேலும் அதேதெருவில் உள்ள செந்தில் என்ற பாத்திரவியாபாரியும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.

அந்த வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் 300 கிராம் வெள்ளிப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.

மேலும் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்தபோது அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் திடுக்கிட்டு எழுந்து சத்தம் போடவே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலையில் வீடுகள் திறந்துகிடப்பதை பார்த்து அருகில் இருந்த நபர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளர்களிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து கொள்ளை நடந்த பொருட்களின் விபரங்களை அறிந்து கொண்டனர்.

அருகில் இருந்த நபர் தெரிவிக்கையில், 18 வயதுக்கு குறைவான 2 வாலிபர்கள் டவுசர் மட்டும் அணிந்து தங்கள் வீட்டில் தாவிக்குதித்ததாகவும், பின்னர் சத்தம்போடவே அவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறினார்.

எனவே அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்ககூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News