செய்திகள்
பொள்ளாச்சியில் நட்சத்திர ஆமை விற்க முயன்ற 5 பேர் கைது
பொள்ளாச்சியில் நட்சத்திர ஆமை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே சிலர் நட்சத்திர ஆமை விற்று வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனபாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மணிகண்டன், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனவர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் மாறு வேடத்தில் சென்று நட்சத்திர ஆமை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் அங்கலக் குறிச்சியை சேர்ந்த சம்பத்குமார்(23), வால்பாறையை சேர்ந்த நந்த குமார்(25), செல்லத்துறை(45), அமிர் தராஜ்(42), கண்ணன்(39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு நட்சத்திர ஆமையும், ஒரு மண்ணுளி பாம்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.