அருப்புக்கோட்டை அருகே விபத்து: கோவிலுக்கு சென்று திரும்பியவர் பலி
பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளைக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 49). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியசாமி (42) உள்பட 4 பேர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றனர். நேற்று இரவு சாமி தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவு காரில் ஊருக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே 4 வழிச்சாலையில் உள்ள வாழ்வாங்கி என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் தீடீரென பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த பாண்டியராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணியசாமி உள்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.