செய்திகள்

பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து - வாலிபர் பலி

Published On 2019-06-25 08:33 GMT   |   Update On 2019-06-25 08:33 GMT
பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சுரேஷ்குமார். இருவரும் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று மாலை 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

பாடி மேம்பாலம், அக்கரகாரம் சிக்னல் அருகே வந்த போது குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது ராஜசேகர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. பின்னர் அருகில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உடன் இருந்த அவரது நண்பர் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த கொளத்தூர் தாதங்குப்பத்தை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி சரிதா ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.

அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று அதிகாலை 2 மணி அளவில் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வந்தது. டிரைவர் ஜானகி ராமன் டிரைவர் பஸ்சை ஓட்டினார். பாடி மேம்பாலத்தில் வந்த போது ஐஸ் லோடு ஏற்றி சென்ற லாரி மீது திடீரென பஸ் மோதியது. இதில் லாரி தலை கீழாக கவிழ்ந்தது. அதில் இருந்த ரமேஷ் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்து பயந்து போன பஸ் டிரைவர் ஜானகி ராமன் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இது பற்றி பஸ்சில் இருந்த ஊழியர்கள் வில்லிவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிமற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர்.

பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News