செய்திகள்

கொடைக்கானலில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கும் மழை

Published On 2019-06-22 10:56 GMT   |   Update On 2019-06-22 10:56 GMT
கொடைக்கானலில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் நேற்று மாலை முதல் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை 6.30 மணி முதல் 7 மணி வரை இடைவிடாது நல்ல மழை பெய்தது. அதன் பின் 9.30 மணிக்கு நகர் முழுவதும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடும் கோடை வெயிலுக்கு கொடைக்கானலும் தப்பாத நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை மக்கள் அனுபவித்து வந்தனர். இதனால் தற்போது பெய்த மழை வெப்பத்தின் தாக்கத்தை அடியோடு குறைத்தது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

காலையில் பெய்த மழையினால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்தனர். இதே போல மேல்மலை கிராமங்களிலும் சாரல் மழை பெய்தது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என தெரியவந்துள்ளதால் விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News