செய்திகள்
ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் செங்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் செங்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர்.
பரமனந்தல் ஊராட்சியில் சுமார் ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பரமனந்தல் குப்பநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் போலீசார், ஆணையாளர் சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.