செய்திகள்

அடிப்படை வசதிகளில் குறை இருந்தால் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2019-06-13 10:27 GMT   |   Update On 2019-06-13 10:27 GMT
அடிப்படை வசதிகளில் குறை இருந்தால் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குந்தா ஊராட்சி தும்பனேரிகம்பை சமுதாய கூடத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 900 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அதிக நபர்கள் வரும் பட்சத்தில் தங்கள் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னவென்பதை கண்டறிந்து தாங்களாகவே செய்து கொள்ளலாம். எனவே அரசின் இத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர், மின்வசதி, போன்றவை குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் 9943126000 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

பொது மக்களிடமிருந்து 91 கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணன், முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், குந்தா தாசில்தார் சரவணன், அரசுத்துறை அலுவலர்கள் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News