போரூரில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
போரூர்:
ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் போரூர் எஸ்.எஸ். அவின்யூ சக்தி நகரில் எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்து தொழிற்சாலையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை தொழிற்சாலையின் கீழ் தளத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் காரணமாக மற்ற 2 தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் தீயனைப்பு துறை மற்றும் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விருகம்பாக்கம், மதுரவாயல் கிண்டி, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்கள் சுமார் 1½ மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர். எனினும் அங்கிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.