செய்திகள்

மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

Published On 2019-06-05 10:01 GMT   |   Update On 2019-06-05 10:01 GMT
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை:

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த போதிலும் மதுரையில் வெயிலின் தாக்கம் சிறிதும் குறைய வில்லை. அக்னி நட்சத்திர நாட்களின்போது பதிவான 106 டிகிரி வெயில் தற்போதும் தொடருகிறது. மேலும் இரவிலும் வெப்பக் காற்று வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது.

மதுரை நகர் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், தல்லா குளம், அய்யர்பங்களா, நாராயணபுரம், பழங்கா நத்தம், சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

மேலும் புறநகர் பகுதிகளான ஒத்தக்கடை, கடச்ச னேந்தல், ஊமச்சிக்குளம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், அழகர்கோவில், தனியா மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போன்று பெருக்கெடுத்து ஓடியது. இடியுடன் மழை பெய்ததால் மதுரை நகரின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. இந்த மழையால் பகலில் வாட்டிய வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News