செய்திகள்
கொலை செய்யப்பட்ட அண்ணன் மயில்சாமி

கோபி அருகே அண்ணனை கொலை செய்த தம்பி

Published On 2019-05-20 09:51 GMT   |   Update On 2019-05-20 09:51 GMT
கோபி அருகே சொந்த அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி வாய்க்கால்மேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 22).

திருமணம் ஆகாத இந்த வாலிபர் இரு சக்கர வாகன மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் மயில்சாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டது. தலையில் கல்லை போட்டு கொன்றதாக கூறப்பட்டது.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக் தகவல் வெளியாகி உள்ளது. வாலிபர் மயில்சாமியை அவரது தம்பியே கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட மயில்சாமியின் தம்பி பெயர் யோகேஸ்வரன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரிடம் மயில்சாமி அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

மேலும் யோகேஸ்வரன் கொண்டு வரும் சம்பளப் பணத்தையும் மயில்சாமி வாங்கி கொண்டு போய் விடுவாராம். மேலும் மோட்டார் சைக்கிளையும் கேட்பாராம். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு தொடர்ந்து இருந்தது.

சம்பவத்தன்றும் அவர்களின் வீட்டு முன்பு உள்ள மரத்தடியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த யோகேஸ்வரன் அண்ணன் மயில்சாமியை பிடித்து தலையை மரத்தில் மோத வைத்தார். மேலும் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. அந்த கல்லிலும் அண்ணனின் தலையை மோதச்செய்தார்.

இதில் மயில்சாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News