செய்திகள்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இதயகோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #madhusudhanan #admk
சென்னை:
அ.தி.மு.க. அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வட சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த மதுசூதனனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் மதுசூதனுக்கு ‘ஆஞ்சியோகிராம்’ செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆஞ்சியோகிராம் செய்யப்பட்ட பின்னர் மதுசூதனன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், டாக்டர்களின் ஆலோசனையின்படி மேலும் சில நாட்கள் மதுசூதனன் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இன்னும் சில நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. #madhusudhanan #admk