செய்திகள்

வத்தலக்குண்டுவில் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2019-05-02 12:02 GMT   |   Update On 2019-05-02 12:02 GMT
வத்தலக்குண்டுவில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஜனனி என்ற சுகன்யா (வயது 30).

இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் (37) என்பவருக்கும் கடந்த 12-9-2010ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

அதன்பின் 18-1-2012ந் தேதி ஜனனிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குழந்தைக்கு நகை சேர்க்க வேண்டும் என கூறி கூடுதல் நகை கேட்டு ஜனனியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

20 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி அவரை வீட்டைவிட்டு துரத்தி விட்டனர்.

வத்தலக்குண்டுவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த ஜனனியையும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஜனனி புகார் அளித்தார். மாஜிஸ்திரேட்டு ரிஜ்வானா பர்வீன் விசாரணை நடத்துமாறு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் லதா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கணவர் சதீஷ் குமார், மாமியார் சுந்தரம்மாள், உறவினர்கள் ஜெயலட்சுமி, செந்தில்திலகர், கந்தசாமி, உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News