செய்திகள்

ராஜபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் படுகாயம்

Published On 2019-03-30 12:40 GMT   |   Update On 2019-03-30 12:40 GMT
ராஜபாளையத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, சுவர் இடிந்து இருவர் சிக்கினர். ஒரு மணி நேரம் போராடி இருவரும் மீட்கப்பட்டனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் காட்டுத் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் அருகே மாரியம்மாள் என்பவரது பழைய ஓட்டு வீடு உள்ளது. புதிய வீட்டிற்காக தொழிலாளர்கள் அருகில் உள்ள மாரியம்மாள் வீட்டின் முன் நின்று பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாள் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் முனியாண்டி (வயது 30), வேலுராஜ் (42) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்க முயற்சித்தனர். முடியாததால் காவல் துறை மற்றும் தீ அணைப்பு நிலையத்தினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீ அணைப்பு நிலையத்தினர் மற்றும் தெற்கு காவல் நிலையத்தினர் இடி பாடுகளில் சிக்கியிருந்த முனியாண்டியை முதலில் காயங்களுடன் மீட்டனர். வேலுராஜ் இடது கால் மீது மண்சுவர் இடிந்து விழுந்ததால் அவரை உடனடியாக மீட்க முடிய வில்லை.

கயிறு மூலம் இடிந்த சுவற்றைக் கட்டி தீ அணைப்பு நிலையத்தினரும், காவல் துறையினரும் ஒரு மணி நேரம் போராடி மண் சுவரை அகற்றி மீட்டனர். வேல்ராஜை மருத்துவமனை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரமாக வராததால், ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் டி.பி. மில்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News